Friday, July 25, 2014

சிவக்குமார் விமர்சனம்

ஜெயமோகனின் பல்வேறுபட்ட புனைவாக்கங்களுள் கொற்றவை எனும் இப்புதினம் புனைவுத் தளத்திலிருந்து சற்றே நீண்டு ‘காப்பியம்’ எனும் வரையறைக்குள் இயங்குவதாக அடையாளப்படுத்தப்பட்டது. சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியையும் இயல்களாகப் பிரித்து ஒவ்வொரு இய லுக்கும் சிலப்பதிகார வரியே தலைப்புகளாகத் தரப்பட்டுள்ளது. நூலின் முற்பகுதி ‘பழம்பாடல் சொன்னது’ எனும் தன்மையில் வர லாற்றுக்கு முந்தைய கால வரலாற்றினை, அதாவது தென்னிலப் பரப்பின் விவரங்களைத் தரும் தன்மையில் அமைந்துள்ளது.
அதற்கடுத்த ‘காற்று’ ‘நிலம்’ ‘ஏரி’ ஆகிய பகுதிகள் சிலப்பதிகாரக் கதையினை எடுத்துக் கூறும் விதமாக அமைந்துள்ளன. இவர் எடுத்துக் கூறும் நிகழ்வினுள் இளங்கோவின் கதையமைப்பு, உத்தி ஆகியவற்றை வரிசைப்படி சொல்லாமல் இன்றைய அறிவுஜீவி பாரம்பரிய விவாதங்களையும் கதையினூடே திணித்து வந்துள்ளமையை வாசகனால் உணர முடிகிறது.
சிலப்பதிகார உரையமைப்பு, கண்ணகியின் வழக்குரை, மதுரை தீப்பற்றி எரிதல் முதலான நிகழ்வுகள் சிலப்பதிகாரத்தைப் பின்பற்றியே எழுதப்பட்டுள்ளன. ஆனால் புகார் காண்டத்தின் இறுதியில் சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சரவணமலையில் ஐயப்பனாகத் தோற்றமளிக்கிறார் எனும் கருத்தினைத் திணித்து இக்காப்பியத்தை முடித்திருக்கிறார். ஜெயமோகனது ‘ரப்பர்’ தொடங்கிக் கொற்றவை வரையிலான புனைவுகளை ஒற்றை நேர்கோட்டுத் தன்மையில் வைத்து விளங்கிக்கொள்ள முடியாது. ஒவ்வொன்றும் பல்வேறு முரணியல் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட வேறொரு ஒற்றைக் கருத்துரு வாக்கத்தினுள் - கருத்தியல் வன்முறையாகவும் - இயங்குகிறது. வைதீகத்துக்குச் சார்பான பதிவுகளை, கருத்துக்களை முன்வைப்பதே அவரது ஒற்றை அறமாக உள்ளது. இம்முயற்சியே விஷ்ணுபுரம் தொடங்கிக் கொற்றவை வரையில் நீட்சி பெற்றுள்ளது.
கொற்றவை எனும் இப்புதினத்தை நவீன மொழி புணரமைக்கப்பட்ட சிலப்பதிகாரம் என்று கூறமுடியாது. சிலப்பதிகாரக் கருத்தியலுக்கு எதிராக உருவாக்கப்பட்ட புனைவாக்கமாகவே கருத முடிகிறது. அவைதீகம் சார்ந்த கருத்துக்களை மறந்தும்கூட இந்நாவலில் பயன்படுத்தாமல், அதற்கு எதிரான மொழியாடலையே பயன்படுத்துகிறார். இந்நாவலில் கவுந்தியை நீலிப் பேயாகவும் புத்தரை ஆலமர் செல்வனாகவும் - சிவனாவும் - புனைந்திருக்கிறார். இதன்மூலம் அவைதீகக் காப்பியம் வைதீகப் புனைவாக உருமாற்றம் பெற்றதென்பதை உறுதியாகக் கூற முடிகிறது. சமண சமயம் சார்ந்த சிலப்பதிகாரத்தை வைதீகச் சார்புடைய காப்பியமாகக் கட்டமைக்க, இளங்கோவடிகளைச் சரவண மலைக்குக் கொண்டுசென்று ஐயப்பனாக மாற்றுகிறார். இவ்வாறு திரித்துச் சித்திரிப்பதன் மூலம் சிலப்பதிகாரக் கதையை வைதீகமயப்படுத்துகிறார்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12213:-2005&catid=1237:2010&Itemid=499

No comments:

Post a Comment