Friday, July 25, 2014

ஷெய்குராஜா கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் ‘கொற்றவை’ நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன்.அருமையாக இருந்தது.சமீபத்திய விகடனில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தங்களின் ஆழ்ந்த தத்துவ ஈடுபாட்டை அவருக்குப் பிடித்த விஷயமாகச் சொல்லியிருந்தார்.அதை நான் அறிந்து கொள்ளும் விதமாகத் தங்களின் ‘கொற்றவை’ நாவல் எனக்கு வாசிக்கக் கிடைத்தது.அதில் ‘பழம்பாடல் சொன்னது’ மற்றும் ‘பாணர் பாடியது’ ஆகிய பகுதிகள் மட்டும் எனக்கு சற்றுப் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தது.அந்தப் பகுதிகளைத் திரும்பவும் ஒருமுறை படிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.மற்றபடி,நீங்கள் எனக்கு அளித்தது குறைவில்லாத தத்துவ அமுதம்.
நான் பெருங்காப்பியமான ‘சிலப்பதிகாரத்தை’ப் படித்தது கிடையாது.ஆனால்,அதைப் பற்றிப் பாடப்புத்தகங்கள் மூலம் கொஞ்சம் அறிந்து கொண்டதுண்டு.’நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என அதன் சிறப்பைப் பற்றி அறிந்தோர் கூறியதைக் கேட்டிருக்கிறேன்.அதன் முழு அர்த்தமும் ‘கொற்றவை’ நாவல் மூலம் தெரிந்து கொண்டேன்.இந்த நாவலைப் படிக்கும் போது சிற்சில நெருடல்கள் என்னை ஆட்கொண்டன.அவையாவன,
1.இது சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் என்பது தெளிவு.ஆனால்,நீங்கள் ‘காப்பியம் கூறியது’ என்ற பகுதிக்கு முன்பு வரை எடுத்துரைத்தது அனைத்தும் ‘சிலப்பதிகாரத்தில்’ கூறப்பட்டவைதானா……? இந்த விஷயம் எனக்குப் புரியவில்லை.
2.//அன்னையே அழியாப் பெருவல்லமையென அறிக.விண்ணகங்களின் கோள்களைச் சுழலவிடுபவள்.சேற்றுப்புழுவில் நின்று துடிப்பவள்.கனிகளில் சிவந்து இனிப்பவள்.சூரியன்களில் எரிந்து வெடிப்பவள்.அவளே சத்தி.அவள் புகழ் வாழ்க!// – இந்த வரிகள் இசுலாமியத் தத்துவத்தை எனக்கு நினைவுபடுத்துகின்றன.
3.’கபாடபுரம்’ புதுமைப்பித்தன் எழுதியது என்று இறுதிப்பக்கங்களில் வருகிறது.ஆனால்,அது தீபம் ‘நா.பார்த்தசாரதி’ எழுதியது என்பதைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
மற்றபடி,இந்த நாவல் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்பல.தங்களுக்கு நன்றி.தொடரட்டும் உங்கள் பணி.
ஷெய்கு ராஜா
அன்புள்ள ஷெய்குராஜா
கொற்றவை,சிலப்பதிகாரத்தை மூலமாக கொண்டு மிகமிக விரித்து எழுதப்பட்டது. பல பகுதிகள் சுதந்திரமாகக் கற்பனைசெய்து எழுதப்பட்டவை. தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றைப்பற்றிய ஒரு நவீனத்தொன்மத்தை உருவாக்கும் முயற்சி இது . காப்பியம் கூறியது உட்படப் பலபகுதிகளில் உள்ளவை,சிலம்பில் உள்ளவை அல்ல.
அன்னையை ஆதிப்பெரும்சக்தியாக உணர்வதென்பது ரிக் வேதம் முதல் உள்ளது. தேவிபாகவதம் அதன் உச்சநிலை. அந்த அருவமான அன்னையைக் கண்ணுக்குத் தெரியும் ஒரு வடிவமாக வழிபாட்டின் பொருட்டு உருவகம் செய்கிறார்கள்.
ஆனால் அருவமான இறைச்சக்தியை எங்கும் எதிலும் காணும் உச்சநிலை,இஸ்லாம் உட்பட எல்லா மத தரிசனங்களிலும் உள்ளதே
கபாடபுரம் என்ற பேரில் புதுமைப்பித்தன் புகழ்பெற்ற சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். நா.பாவின் நாவல் பிற்பாடு வந்தது
தங்கள் வாசிப்புக்கு நன்றி. மேலும் ஒருமுறை வாசித்தபின் இன்னும் தெளிவு வரக்கூடும்
ஜெ

No comments:

Post a Comment